பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் இணை இயக்குநரை மாற்றிவிட்டு, நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"அதிமுக அமைச்சர்கள், துணை முதல்வர், முதல்வர் ஆகியோர் மீது உள்ள ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் இணை இயக்குநரான ஐ.ஜி. மீது, பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரை டிஜிபி தலைமையிலான துறை சார்ந்த விசாரணைக் கமிட்டி விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் காவல் அதிகாரி லஞ்ச ஊழல் தடுப்புத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். ஆனால், புகாருக்கு ஆளாகிய ஐ.ஜி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யின் கீழ்தான் அதிமுக அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை உள்ள அனைத்து லஞ்ச ஊழல் புகார்களும் விசாரணையில் இருக்கிறது. இப்படியொரு கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளான ஓர் அதிகாரி லஞ்சப் புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்?
புகாருக்கு ஆளான இணை இயக்குநரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் நிச்சயமாக பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது என்பதால், அவரை உடனடியாக மாற்றி விட்டு, நேர்மையான ஒரு ஐ.ஜி.யை இணை இயக்குநராக நியமித்து, இந்த ஊழல் வழக்குகளை எல்லாம் விரைவாகவும் முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.