தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணையும், வாதங்களும் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்தன.
இதையடுத்து, மனு மீதான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே.கோயல் தெரிவித்திருந்தார். அதன்படி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அதன் இணையதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இவ்விவகாரம் தொடர்பாக கூறியிருப்பதாவது:
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு ஏற்படவில்லை என தீர்ப்பாயம் சொல்லியிருப்பது வருந்தத்தக்கது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கடும் எதிர்ப்பை தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாத அளவுக்கு, நல்ல தீர்வினை மக்களுக்குத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.