சென்னை: தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த 54 வயது லோகநாதனுக்கு, யாருக்குமே ஏற்படாத ஒரு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது.
அவரது காதில் இருந்து வெளிர் சிவப்பு நிறத்திலான, மெல்லிய சதைப் போன்ற ஒரு அமைப்பு வெளியேறியதுதான் அது. காதில் பயங்கர சத்தம் ஏற்படுவதால், ஏதோ தொற்று ஏற்பட்டு வளருவதாகவே லோகநாதன் முதலில் நினைத்தார். ஆனால், அவரது மூளைதான் ஒரு சிறிய ஓட்டை வழியாக காதுக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது என்பதை மருத்துர்கள் மேற்கொண்ட ஸ்கேன்கள் மூலம் தெரிய வந்தது.
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மண்டை ஓட்டின் சிறிய பகுதி வெட்டி எடுக்கப்பட்டு, மூளைக்கு அருகே இருந்த ஓட்டைப் பகுதி மூடப்பட்டது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அது அவரது உயிருக்கும், கண் பார்வைக்கும் எமனாக மாறியிருக்கும்.
இந்த பாதிப்புக்குக் காரணம், லோகநாதன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கிய போது ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே, மண்டை ஓட்டுக்குள் ஓட்டை ஏற்பட்டு, காது வழியாக மூளை கசியும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.