முகப்பு
தமிழ்நாடு

தமிழறிஞர் க.ப. அறவாணன் மறைவு: ராமதாஸ் இரங்கல்!

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான க.ப. அறவாணன் உடல்நலகுறைவால் இன்று சென்னையில்

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:


திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான க.ப. அறவாணன் உடல்நலகுறைவால் இன்று சென்னையில் காலமானார்.

அவரது மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான க.ப. அறவாணன் உடல்நலக் குறைவால் செர்ன்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழறிஞர் அறவாணன் எளிய குடும்பத்திலிருந்து வந்து எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர். இளம் வயது வறுமை அவரது கல்வியையும், தமிழாராய்ச்சியையும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. நான் மதிக்கும் தமிழறிஞர்களில் ஒருவரான வ.ஐ.சுப்பிரமணியத்தின் மாணவர்களில் ஒருவரான அறவாணன் இளம் வயதிலேயே சாதனைகளைப் படைத்தவர். ஒன்றரை ஆண்டுகளில் முனைவர் பட்ட ஆய்வை முடித்த அவர், 27 வயதில் கல்லூரி முதல்வர் ஆன சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு துணையாக இருந்தவர் அறவாணன். 2008-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி குறித்து விவாதிக்க நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சி, தமிழர் வளர்ச்சி ஆகியவை குறித்தே சிந்தித்து செயல்பட்டு வந்தவர்.

முனைவர் க.ப. அறவாணனின் மறைவு தமிழுக்கும், தமிழாராய்ச்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →