ஓடும் ரயிலில் பயணி கொலை வழக்கு: சேலம் பெண்கள் சிறையில் திருநங்கை அடைப்பு
ஓடும் ரயிலில் இருந்து பயணியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான திருநங்கை சுவேதா, சேலம் பெண்கள் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டார்.
ஓடும் ரயிலில் இருந்து பயணியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான திருநங்கை சுவேதா, சேலம் பெண்கள் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்நிலையம் வழியாக அண்மையில் சென்ற ரயிலில் பயணித்தவர்களிடம் திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர். அப்போது, பணம் கொடுக்காததால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதில், பலத்த காயம் அடைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கலும் சத்தியநாரயணன் (30) என்பவர் உயிரிழந்தார்.
இதில் தேடப்பட்டு வந்த வேலூர் மாவட்டத்துக்குள்பட்ட திருப்பத்தூரை அடுத்த ஜெய் பீம் நகரைச் சேர்ந்த திருநங்கை சுவேதா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷத்தின் தாக்கம் எதுவும் இல்லாததால் சுவேதாவை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் அழைத்து வந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சுவேதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் திருநங்கைதான் என்பதை உறுதிபடுத்தி சான்றளித்தனர். இதையடுத்து, சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3-இல் சுவேதா ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி சண்முகபிரியாவின்உத்தரவின்பேரில், சேலம் பெண்கள் சிறையில் சுவேதா 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.