இடையூறாக உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும்
பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
கடந்த 2016 -ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனைத் தொடங்கியும் வைத்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 -ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூட இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் சாலை சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை.
எனவே மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு தமிழக அரசையும் ஆர்.கே. நகர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டிடிவி தினகரனையும் கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோல் தமிழ்நாடு முழுக்க பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.