முதல்வருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்திக்க உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்திக்க உள்ளார்.
பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதே நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைப்பது குறித்து அறிக்கை தயாரிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் பல்வேறு மாநிலங்களுடன் ஒப்பிட்டு அறிக்கை ஒன்றைத் தயாரித்து மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர்.
இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அளிக்க மு.க.ஸ்டாலின் நேரம் கோரியிருந்தார். ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் முதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வரை செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
அப்போது, போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்தாமலேயே அரசு போக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் இயங்கச் செய்வது குறித்த ஆலோசனைகளையும் மு.க.ஸ்டாலின் அளிக்க உள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.