பண மோசடி புகாரில் முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக பதவி வகித்தேன்.
அப்போது என்னிடம் பேரவை, கட்சி அலுவலகம் மற்றும் குடும்பச் செலவுகளுக்காக ஜெ.தீபாவும், அவரது கார் ஓட்டுநரான ஏ.வி.ராஜாவும் 2017 பிப்ரவரி முதல் பல்வேறு கால கட்டங்களில் ரூ.1.12 கோடி பணம் பெற்றனர்.
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகவும், பின்னர் அமைச்சராக்குவதாகவும் கூறியதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு பணம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றுகின்றனர் என்று தெரிந்து, பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நான் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.