முகப்பு
தமிழ்நாடு

என் வாழ்வின் முக்கிய தருணத்தில் இருக்கிறேன்: மதுரை விமான நிலையத்தில் நெகிழ்ந்த கமல்! 

என் வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் நெகிழ்ச்சியுடன் கூறினார்

Updated On : 20 பிப்ரவரி, 2018 at 1:28 PM
பகிர்:

மதுரை: என் வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

இதற்கு முன்னோட்டமாக பல்வேறு பிரமுகர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன் புதனன்று மதுரையில் நடைபெறவுள்ள தனது அரசியல் பிரவேச கூட்டத்திற்கு பங்கேற்க வருமாறு,  தனது ஆதரவாளர்களுக்கு நடிகர் கமல் டிவிட்டரில் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். 

செவ்வாய் அன்று காலை சென்னையில் இருந்து விமானம் வழியாக புறப்பட்ட அவர், சிறிது நேரத்திற்கு முன்பாக மதுரை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கமல் கூறியதாவது:

நான் எதற்கு வந்திருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். என் வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்த பொழுது என்னை வாழ்த்தி வழியனுப்பிய மண்; இப்பொழுதும் அதே அன்புடனும் பாசத்துடனும் வரவேற்கிறது.

நான் நாளைக் காலை நேராக ராமேஸ்வரம் சென்று விட்டு அங்கிருந்து மாலை மதுரை கூட்டத்திற்கு வருகிறேன். அங்கு கட்சியின் கொடி ஏற்றப்பட்டு, கட்சிக் கொள்கைகளின் சாராம்சம் விளக்கப்படும். உங்கள் அனைவரையும் கூட்டத்திற்கு வரவேற்கிறேன். அங்கு நேரில் சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அவரிடம் ஏன் மதுரை தேர்வு செய்யயப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, அவர் "வதும் ஊரே; யாவரும் கேளிர்" என்று பதிலளித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.