தமிழக அரசியலில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலர்ந்தாலும், அவை மணக்காது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
அண்ணா அறிவாலயத்தில் இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்து கள ஆய்வு நடத்தியுள்ளேன். இது சந்திப்பு என்பதைவிட உணர்வுகளின் சங்கமம் என்பதே பொருத்தமானதாகும். கோஷ்டிப் பூசலை விட்டு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக பெரிய வெற்றிù பறும் என்று நிர்வாகிகள் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
இது குடும்பக் கட்சிதான்: திமுகவை குடும்பக் கட்சி என்று வெளியில் இருந்து விமர்சனம் செய்வர். அதற்கு, இது குடும்பக் கட்சிதான். பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிரக் கூறி வருகிறோம்.
அண்ணாவும், கருணாநிதியும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை திமுக எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும். பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காது.
திமுக என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கும் உணவூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள திமுகவின் தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களின் மனக்குமுறலைக் கேட்டு வருகிறேன். திமுக வெற்றிபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் என்றார்.