ஊதிய உயர்வு பிரச்னை: மத்தியஸ்தர் இன்று மீண்டும் விசாரணை
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னை குறித்து தொழிற்சங்கங்கள், நிர்வாகத்திடம் மத்தியஸ்தர் இ.பத்மநாபன் சனிக்கிழமை (பிப்.24) மீண்டும் விசாரணை நடத்துகிறார்.
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னை குறித்து தொழிற்சங்கங்கள், நிர்வாகத்திடம் மத்தியஸ்தர் இ.பத்மநாபன் சனிக்கிழமை (பிப்.24) மீண்டும் விசாரணை நடத்துகிறார்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைய, சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி இ. பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 46 தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுத் தரப்பு, போக்குவரத்துத் துறை நிர்வாகிகளை பிப்.9-ஆம் தேதி அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிப்.16-ஆம் தேதிக்குள், தொழிற்சங்கத்தினர், ஊதிய உயர்வு சார்ந்த, தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அரசின் விளக்கத்தை, 23-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணை பிப். 24 இல் நடக்கும் என்றும் அறிவித்தார். அதனடிப்படையில் இரு தரப்பும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளனர்.
இதையடுத்து இன்று இருதரப்புக்கும் இடையேயான விவாதங்களை மத்தியஸ்தர் கேட்டறியவுள்ளார். வரும் மார்ச் 1-ம் தேதி அவர் அறிக்கை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.