சென்னை: இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கூறுவதன் மூலம் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் மக்களை அவமதிக்கிறார் என்று அத்தொகுதி எம்.எல்.வான டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.வான டிடிவி தினகரன் வியாழன்று நிருபர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் தான் வெற்றி பெற்றது என்றால் ஓட்டுக்கு ரூ.6,000 என்று மொத்தம் ரூ.120 கோடி கொடுத்தவர்கள்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. கமல்ஹாசன் அந்த வார இதழில் என்ன எழுதி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை.
பணம்தான் வெற்றி பெற்றது என்று சொல்வதன் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கமல்ஹாசன் கேவலப்படுத்துகிறாரா? அவர்கள் மீது குறை சொல்கிறாரா? தேர்தலில் பணம் பட்டுவாடா செய்தோம் என்று கமல்ஹாசன் எதை வைத்துச் சொல்கிறார்?
அ.தி.மு.க.வாக இருக்கட்டும், தி.மு.க.வாக இருக்கட்டும், பொதுவாக தோற்றுப் போனவர்கள் சொல்லும் வார்த்தைதான் அது. இதை கமல்ஹாசன் சொல்கிறார் என்றால் இது அவரது தரத்தைதான் காட்டுகிறது. இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. திரும்ப திரும்ப சொல்வதால் பொய் உண்மையாகி விடாது.
இவ்வாறு தினகரன் கூறினார்.