இனக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பாஜகவின் தேசிய செயலர் ஹெச். ராஜா பேசி வருவது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு) மாநிலப் பொதுச் செயலர் பி.பி.இளையரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆண்டாள் குறித்து பேசியதற்கு கவிஞர் வைரமுத்து வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துவிட்டார். இந்நிலையில், இனக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா பேசுவது கண்டனத்துக்குரியது.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இதயங்களில் இருப்பவர் கவிஞர் வைரமுத்து. நாட்டுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், திரைத் துறைக்கும் பெருமை சேர்த்தவர். அவரது கவிதை படைப்புகள் முக்காலத்தையும் வென்று நிற்கும். நாட்டின் உயரிய விருதுகளைப் பெற்றவர்.
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு சுயவிளம்பரத்துக்காக ஹெச். ராஜா பேசுவது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.