தமிழ்நாடு

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வை தொடங்குவதில் தொடரும் இழுபறி: விசாரணை 16 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு கால நீட்டிப்புக்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜூலை 16 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததால், இக்கலந்தாய்வு தொடங்கும் தேதியை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு, முதன்முறையாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வை முழுவதும் ஆன்-லைன் மூலம் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்குப் பிறகு ஏன்?: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும். அதன் காரணமாக பி.இ. கலந்தாய்வை ஜூன் இறுதி வாரத்தில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி, ஜூலை 30 -ஆம் தேதிக்குள் முடிப்பதை பல்கலைக்கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதில், பி.இ. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வை எத்தனை நாள்கள் நடத்துவது, எப்போது தொடங்குவது என்பது, எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வைப் பொருத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அதிக எண்ணிக்கையில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துவிட வாய்ப்புள்ள காரணத்தால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
கூடுதல் அவகாசம் கோரி: இந்த நிலையில், 2018 -19 -ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. அதாவது ஜூலை 1 -ஆம் தேதி தொடங்கி 7 -ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் காரணமாக, பி.இ. கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இயலாமல் போனது. அது மட்டுமின்றி, மீதமுள்ள 20 நாள்களில் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலாது என்பதால், கலந்தாய்வை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டும், பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் தொடங்க அனுமதிக்கக் கோரியும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
பி.இ. கலந்தாய்வு - இழுபறி ஏன்?: இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், மனு மீதான விசாரணையை ஜூலை 16 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தேதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றம் காலநீட்டிப்பு மனு மீதான விசாரணையை வரும் 16 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதால், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தேதியை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வரும் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கும் நிலையில், உடனடியாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் இறுதி செய்யப்பட்டு, பி.இ. சிறப்புப் பிரிவு இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கப்பட்டு விடும். எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்காக காத்திருக்கப் போவதில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT