விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள சாலைப்பணி ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே அலுவலகம் மற்றும் நிறுவனர்களின் வீடுகளில் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இங்குள்ள இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அந்த அலுவலகத்தை ஒட்டியுள்ள அதன் நிறுவனர்களின் வீடுகளிலும் கடந்த திங்கள்கிழமை முதல் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் மேற்கொண்ட சாலைப் பணி ஒப்பந்தப் பணிகளில் வரி ஏய்ப்பு நடைபெற்றது தொடர்பாக வருமானவரித் துறையினருக்கு வந்த புகார்களை அடுத்து நடைபெறும் இச்சோதனை 3ஆவது நாளான புதன்கிழமையும் நீடித்தது.
முதல் நாளான திங்கள்கிழமை அருப்புக்கோட்டையிலுள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிறுனர்களின் வீடுகள், காரியாபட்டியிலுள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தான பஞ்சாலை, இந்நிறுவனத்துக்குச் சொந்தமான திருச்சுழி அருகே உள்ள கல்குவாரிகள், கீழமுடிமன்னார்கோட்டையிலுள்ள அந்நிறுவனத்தினரின் வீடு என பல இடங்களிலும், வங்கிக்கணக்கு ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை கைப்பற்றி, அவை அனைத்தையும் அருப்புக்கோட்டையிலுள்ள அந்த நிறுவனர்களின் வீடுகளில் வைத்து விசாரணை நடைபெற்றது.
இவ்விசாரணையின்போது நிறுவனர்களான பாலசுப்பிரமணி, கருப்பசாமி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து பெற்ற தகவல்களுக்கும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும் உள்ள தொடர்பை வருமானவரி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை காலையில் தொடங்கிய இச்சோதனை மாலை வரை நீடித்தது.