முகப்பு
தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு

சேலம் மாவட்டத்தின் ஓமலூர், மேச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 

Updated On : 22 ஜூலை, 2018 at 10:33 AM
கோப்புப்படம்
பகிர்:

சேலம் மாவட்டத்தின் ஓமலூர், மேச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 

சேலம் மாவட்டத்தின் மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, காமலாபுரம், மேச்சேரி, தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவானதாக மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 2 நிமிடங்களுக்கு நீடித்த இந்த நில அதிர்வு காரணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலஅதிர்வு காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை. ஜன்னல், கண்ணாடி, கதவுகள், அலமாரிகள், பாலங்கள் மற்றும் விளம்பர பலகைகள் அருகே நிற்க வேண்டாம். இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவலுக்கு 1077என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மக்கள் பதற்றமின்றி இருக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

மேட்டூர் அணை நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டி வரும் வேளையில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்போது நில அதிர்வு ஏற்படுவதாக அப்பகுதியில் கூறப்படுகிறது.

இதேபோன்று தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம், நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியிலும் அதே வேளையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.