காலா' படத்துக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ள காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுக்கள் புதன்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ள காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுக்கள் புதன்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா முன் செவ்வாய்க்கிழமை ஆஜரான வழக்குரைஞர் சுரேந்தர், ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரின் வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து, நாடார் சமுதாயத்துக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடர உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவாக தாக்கல் செய்யும் நிலையில், புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
கூடுதல் கட்டணம்: இதே போன்று ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள காலா' திரையிடப்பட உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.