ஜெயலலிதா வாரிசு விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 10 -ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 10 -ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக அம்ருதா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என்றும், தங்கள் குல வழக்கப்படி அவரது உடலை மீண்டும் எடுத்து அடக்கம் செய்ய அனுமதிக்கவும், தமக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்' எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த உயிரி மாதிரிகள் உள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தது. தங்களிடம் அவரின் ரத்த உயிரி மாதிரிகள் எதுவும் இல்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 10 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.