மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான 200 ஏக்கர் நிலம் வருவாய் துறை சார்பில் உடனடியாக வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது :
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள 200 ஏக்கர் நிலம் மட்டுமல்லாது, கூடுதலாக 67 ஏக்கர் நிலம் அரசு நிலமாக தயார் நிலையில் உள்ளது. அதனை செம்மைப்படுத்தி வருவாய் துறை சார்பில் ஒப்படைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், நான்கு வழிச் சாலையில் இருந்து மருத்துவமனைக்கு புதிதாக இணைப்பு சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை மதுரை -கன்னியாகுமரி நான்கு வழிச் சாலைக்கு மிக அருகிலும், இதற்கு 15 கி.மீ. தூரத்தில் விமான நிலையமும், 14 கி.மீ. தொலைவில் மதுரை ரயில் நிலையமும் உள்ளது என்றார் அவர்.
ஆய்வின்போது மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு வந்தார். நான்கு வழிச்சாலையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலைகள் அனைத்தையும் தரமுள்ளதாக நான்கு வழிசாலையைப்போல் அமைக்க அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை கூறினார். அப்போது சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.