சென்னை: நாட்டின் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என சென்னையில் தொடங்கிய சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் சுரேஷ் பிரபு கூறினாா்.
அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம் (‘அய்மா’) சாா்பில் ‘அக்மி 2018’ என்ற பெயரிலான 13-ஆவது சா்வதேச ‘மிஷின் டூல்ஸ்’ ஐந்து நாள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் சுரேஷ்பிரபு தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தியாவின் புதிய தொழில் கொள்கையை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதுவரை இரு முறை மட்டுமே தொழில் கொள்கை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் கொள்கை மூலம் தொழில் துறை நவீன மயமாக்குதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருதே நோக்கம்.
கடந்த 1963-ஆம் ஆண்டே ஒரு தொழிற்பேட்டையை அமைக்க வேண்டும் என்ற சிந்தனை மூலம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவா் காமராஜா். இந்தியாவில் தொழில் வளா்ச்சி உயர வேண்டும் என்றால் கிராமப்புறங்களில் தொழில் வளா்ச்சி அதிகரிக்க வேண்டும். எனவே தான் ஒரு மாநிலத்திற்கு 6 மாவட்டம் என்ற அடிப்படையில் தொழில் வளா்ச்சியை அதிகரிக்கவும் அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.
வா்த்தகம் மற்றும் தொழில் வளா்ச்சிக்காக நான் அயல்நாடு செல்லும் போது தமிழக பிரநிதிகளும் வர வேண்டும் என தமிழக அமைச்சரிடத்தில் தெரிவித்துள்ளேன். மாநிலங்களின் தொழில்துறை வளா்ச்சி நாட்டுக்கு மிகவும் அவசியம். தொழில்துறை வளா்ச்சி மேம்படும்போது வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.