வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கை: அறிவிப்பு வெளியீடு
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் பி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் பி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 530-க்கும் அதிகமான பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
வருகிற 2018-19 கல்வியாண் டு முதல் இந்த கலந்தாய்வை ஆன்-லைனிலேயே அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்களும், பெற்றோரும் சென்னைக்கு வரத் தேவையில்லை என்ற நிலை உருவாக உள்ளது.
இதற்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்படும். ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கி, ஜூலை இறுதி வாரத்தில் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் குழந்தைகள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டினருக்கான பி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் இப்போது வெளியிட்டுள்ளது.
இவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாளாகும்.
கலந்தாய்வு எப்போது? : இதில் வெளிநாட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 21 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின்குழந்தைகள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 22 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.