மதுரையில் கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் தொடர்புடைய ரவுடிகள் முத்து இருளாண்டி (எ) மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மதுரை சிக்கந்தர்சாவடியில் உள்ள ஒரு வீட்டில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் இருவரையும் போலீஸார் ரகசியமாக சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் ரவுடிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது:
கொலை குற்றம் தொடர்பாக முத்து இருளாண்டி (எ) மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்ய முயன்ற போது, அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு சுட முயன்றனர். எனவே தற்காப்பு காரணமாக போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் ரவுடிகள் இருவரும் சுடப்பட்டனர்.
செல்லூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் இவர்களைப் பிடிக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகளிடம் இருந்து முதல்கட்டமாக ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றவை விசாரணைக்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டும் என்றார்.