முதுநிலை படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு: அரசு மருத்துவர்கள் போராட்டம்
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு மருத்துவர்களுக்கும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், நிகழாண்டு நடைபெறும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பட்டையை அணிந்து பணிக்குச் சென்றனர். இதுதொடர்பாக சங்கத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் கூறும்போது, 'கோரிக்கைகள் நிறைவேறும் வரை நூதன வழிகளில் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்' என்று தெரிவித்தனர்.