இந்தியக் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிப்பதால், தென் தமிழகத்தின் கன்னியாகுமரி , நாகர்கோவில், மார்தாண்டம் உள்ளிட்டப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:
தெற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வெள்ளிக்கிழமை உருவானது.
இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு அருகே நீடிக்கும். இதன் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.
மேலும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுவீசக் கூடும்.
எனவே மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் அடுத்த 2 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.