நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள தொடுவாய் கடற்கரையோரத்தில் 10 டால்பின்கள் இறந்த நிலையில் ஒதுங்கியிருப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
சீர்காழி அருகேயுள்ள மீனவ கிராமமான தொடுவாய் கடற்கரையோரத்தில் ஆங்காங்கே 10 டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. டால்பின்கள் அதிகளவில் இறந்து கிடப்பதாலும், அவற்றை அப்புறப்படுத்தாததாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
தொடுவாய், கூழையார் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் எண்ணெய் தொழிற்சாலையிலிருந்து கடலில் விடப்படும் கழிவுநீராலும், விசைப் படகுகளில் உள்ள பிளேடுகளாலும் டால்பின்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
டால்பின்களின் இறப்பைத் தடுக்கவும், இறந்த டால்பின்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகளவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கின என்பது குறிப்பிடத்தக்கது.