சொத்து வரி உயர்வைக் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்டடங்களுக்கும் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு புதிய வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகள், சிறு கடைகள், குடிசைத் தொழிலாக வீடுகளிலேயே நடைபெற்ற சிறு குறு தொழில் மையங்களுக்கு ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு என்று பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான வரி விகிதம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடங்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் வரி விகிதத்தை 5 முதல் 25 மடங்கு வரை உயர்த்தத் தீர்மானித்துள்ளன. இத்தனை மடங்கு வரி உயர்வு என்பது ஏற்புடையதல்ல. எனவே, சொத்து வரி உயர்வைத் திரும்பப்பெற வேண்டும்.
கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம் (2013) என்ற மத்திய சட்டம் இயற்றப்பட்ட போதும், அதனைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதுமான கவனம் செலுத்தவில்லை. எனவே, நாடு முழுவதும் கையால் மலம் அள்ளுவதுதொடர்கிறது.
இந்நிலையில், கேரள அரசு இவ்வாறு கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தாமல், 5,000 இடங்களில் ரோபோக்களைப் பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளது. எனவே, தமிழக அரசும் கேரள அரசைப்போல் ரோபோக்களைப் பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக அண்மையில் சென்னையில் நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.