கூட்டுறவு சங்கத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யக் கூடாது என்று மாநில கூட்டுறவுத் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு கொடுக்க சென்ற மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை கேலி செய்யும் வகையில் கூட்டுறவு தேர்தல் ஆணையர் அவதூறு செய்ததோடு, கோரிக்கையையும் ஏற்க மறுத்துள்ளார்.
அதற்காக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தியபோது, கோரிக்கையை ஏற்பதுபோல கூட்டுறவு தேர்தல் ஆணையர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்ததன் அடிப்படையில் அன்று போராட்டம் கைவிடப்பட்டது. அந்த உத்தரவை நம்பி, தருமபுரி மாவட்ட பொது நூலகத்துறை கூட்டுறவு சங்கத்துக்கு போட்டியிட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி. சரவணனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்று மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்றும் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் எச்சரித்துள்ளது வரவேற்கத்தக்கது.
எனவே, மாற்றுத்திறனாளிகளும் கூட்டுறவுத் தேர்தலில் பங்கேற்கும் வகையில் உரிய உத்தரவை தமிழக அரசு உடனடியாகப் பிறப்பித்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.