தொண்டர்களையும் பொதுமக்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி
தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்மையில் சேலம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்கள்கிழமை தருமபுரி வழியாக காரில் திருப்பதிக்குச் சென்றார். அப்போது, தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் அக் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு, குண்டல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: சேலத்திலிருந்து திருமலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். தருமபுரி மாவட்டம் வழியாகச் செல்லும் எனக்கு, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில், மாவட்ட மக்களே திரண்டு வரவேற்பு அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் அன்பின் காரணமாக நடக்கிறது. இந்த அன்பின் மூலம் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. தமிழக மக்களையும், கட்சித் தொண்டர்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது என்றார். முன்னதாக, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.