அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மே 23, 24 ஆகிய தேதிகளில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிவோருக்கு, தற்காலிக முறையில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.
பொது மருத்துவம், காது -மூக்கு -தொண்டை, குழந்தைகள் நலம், உளவியல், நரம்பியல், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட 31 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம்.