சென்னை: தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை என்றும் விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறினேன். தமிழக அரசு அலட்சியப்படுத்தியதாகவும், அதன் தொடர்ச்சி தான் தூத்துக்குடி சம்பவம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
தூத்துக்குடியில் 99 நாட்களாக ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடைபெற்றது. 100-வது நாளில் வன்முறை ஏற்பட யார் காரணம்? இவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் நடந்தேறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தீய சக்திகள் உள்ளே நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர்.
மேலும் அவர்களைப் பொறுத்தவரை இது சோதனை ஓட்டம்தான். சிலரின் தூண்டுதல்களால் இது போன்ற சம்பவங்கள் இன்னும் நிறைய நடக்கும் என எச்சரித்தார். இதை தடுக்க அவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ஆள்வதற்கு தமிழக அரசுக்கு யோக்யதை இல்லை. ஆகையால் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் நாடகமாடுகிறது என்று குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.