மதுரை: நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கிராம மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏன் இணையதளத்தை முடக்கினீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை வழங்கப்படும் என்றும், இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தொடர்பாக இரு மாவட்ட ஆட்சியர்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும், தூத்துக்குடியில் இணைய சேவை முடக்கம் தொடரும் என்றும் கூறியது.
மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வழக்குரைஞர் கூறுகையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.