முகப்பு
தமிழ்நாடு

பட்டாசு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏகோபித்த வரவேற்பு அளித்த சென்னைவாசிகள் 

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை

Updated On : 8 நவம்பர், 2018 at 5:03 PM
பகிர்:


சென்னை: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மற்ற நகர மக்கள் பின்பற்றினார்களோ என்னவோ தெரியாது, சென்னை வாசிகள் நிச்சயம் சிறப்பாகவே பின்பற்றியிருக்கிறார்கள் என்பதை காற்றின் மாசு அளவே தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை முடிந்த பிறகு, சென்னையில் பெரிய அளவில் புகை மூட்டமோ, காற்று மாசுபாடோ ஏற்படவில்லை. தில்லி, மும்பை உள்ளிட்ட மாநகரங்கள் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாட்டால் திணறிப் போயிருக்கும் நிலையில் சென்னையில் அந்த அளவுக்கு சிக்கல் எழவில்லை.

கடந்த இரண்டு நாட்களாக தெளிவான வானம், புகைமூட்டமில்லாத காலை பொழுதுகளையே பார்க்க முடிகிறது.

Advertisement

கடந்த 2017ம் ஆண்டை ஒப்பிட்டால் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்கிறார்கள். அதாவது கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு மிக மோசமடைந்தது. பெசன்ட் நகரைத் தவிர மற்ற இடங்களில் காற்று மாசு அளவு கடுமையாக உயர்ந்தது. சில காலை நேர விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால் இந்த ஆண்டு அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. இதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இந்த ஆண்டு பட்டாசு விற்பனையும் 45 முதல் 50 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், பட்டாசு மொத்த வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால், உச்ச நீதிமன்றம் அனுமதித்த நேரத்தில் அல்லாமல் பிற நேரத்தில் பட்டாசு வெடித்ததற்காக தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2,372 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 359 வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.