தமிழ்நாடு

சர்கார் விவகாரம்: விஜய், முருகதாஸுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் 

DIN

சென்னை: சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸுக்கு எதிராக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று  வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்; இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள்; திரைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் சர்கார் படக்குழுவினர் வன்முறையைத் தூண்டும் வகையில் தீவிரவாதிகள் போன்று செயல்படுகின்றனர். அத்தகைய காட்சிகளுக்காக நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் புதனன்று கருத்து தெரிவித்திருந்தனர்.

தற்போது சர்கார் திரைப்படத்திற்கு எதிராக வியாழனன்று மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸுக்கு எதிராக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தேவராஜ் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் தமிழக அரசின் முத்திரை பதித்த இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தவறான நடவடிக்கையாகும். 

எனவே இது குறித்து இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் மற்றும் இயக்கியுள்ள முருகதாஸ் ஆகிய இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படத்திற்கு எதிராக அமைச்சர்கள் விமர்சனம், தலைமை வழக்கறிஞருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை, மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது காவல்துறையில் புகார் என சர்கார் படக்குழுவினருக்கு சிக்கல்கள் அதிகரித்து வருகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT