கடலூரில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு ஆய்வின்போது, அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை சுகாதாரமின்றி இருந்ததால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிமனையின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அங்கிருந்த நீர்த் தேக்கத் தொட்டியில் மாசடைந்த நிலையில் தண்ணீர் இருப்பதைப் பார்த்த அவர், தொட்டியை உடனடியாக சுத்தப்படுத்த அறிவுரை வழங்கினார். பணிமனையை சுத்தமாக, சுகாதாரமாக பராமரிக்காததற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், அபராதத்துக்கான ரசீது உடனடியாக நகராட்சி மூலம் வழங்கப்பட்டது.