திரையரங்குகளில் திருட்டு விடியோ எடுப்பதைத் தடுக்க திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள், தமிழக காவல் துறை டிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்தி, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பி.மீனாட்சி சுந்தரம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
புதிய திரைப்படங்களைத் திரையிடும்போது திரையரங்குகளுக்கு வருபவர்கள் திரைப்படங்களை திருட்டுத்தனமாகப் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிடுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்குகள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு கைது செய்கின்றனர்.
திரைப்படத்தை பார்க்க வருபவர்கள் செல்லிடப்பேசி வழியாக விடியோ பதிவு செய்து வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? செல்லிடப்பேசியை எடுத்துச் செல்ல தடை விதிப்பது சாத்தியமற்றது. எனவே, இந்த விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
நீதிபதி அறிவுறுத்தல்: இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திருட்டு விடியோ பிரச்னைக்குத் தீர்வு காண, திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், தமிழக காவல் துறை டிஜிபி ஆகியோர் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை வரும் 29 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.