புதுச்சேரி: ‘கஜா’ புயல் காரணமாக புதுச்சேரி முழுவதும் அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வைத்துள்ள கோயில் விழா பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகளை உடனடியாக அகற்ற புதுச்சேரி நகராட்சிகள் உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள "கஜா' புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மேற்கு மற்றும் தென் மேற்கு நோக்கி நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும். அதன்பிறகு வலுவிழந்து சாதாரண புயலாக கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை (நவ.15) நண்பகலில் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வழக்கத்தைவிட ஒரு மீட்டர் உயரத்துக்கு கூடுதலாக அலைகள் எழக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து 10 பேரிடர் மீட்பு குழுக்கள் நாகை, சிதம்பரத்துக்கு 2 குழுக்களும், சென்னை, கடலூர், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு தலா ஒரு குழுவம் விரைந்துள்ளன.
இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி முழுவதும் அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வைத்துள்ள கோயில் விழா பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கட்டுமானப் பொருட்கள் எதுவும் சாலையில் வைக்கப்பட்டிருந்தால் அவற்றையும் உடனடியாக அகற்றவும் நகராட்சிகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.