சென்னை: நன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடியை பலசாலி என ரஜினி கூறியிருப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிண்டல் செய்துள்ளார்.
சென்னை போயஸ் இல்லத்தில் செவ்வாயன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷயங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார்.
பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கிறார்கள், அதனால் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக ஆபத்தான கட்சிதான் என்று பதிலளித்தார். இதனை விளக்குமாறு செய்தியாளர்கள் கேட்ட போது, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
இந்நிலையில் நன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடியை பலசாலி என ரஜினி கூறியிருப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
நன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடியை பலசாலி என ரஜினி கூறியிருப்பார். பலசாலி என்று யாரவது ஊருக்குள் வந்தால் அவரை அனைவரும் சேர்ந்து விரட்டுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.