இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என தினகரன் கூறியுள்ளார்.
இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில் தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது என்றும் சதி திட்டம் தீட்டுதல், மோசடி, அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி, சாட்சியங்களைக் கலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் முகாந்திரம் உள்ளது என தில்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்ட தரகர் சுகேஷ் சந்திரசேகரன், மல்லிகார்ஜூனா, குமார் உள்ளிட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக *லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்ட நீதிபதி, தினகரன் உள்ளிட்ட 4 பேரை விடுவிக்கவும் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நந்துசிங், லலித் குமார் உட்பட 5 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் டிசம்பர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் மீதான குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டுள்ளதால் டிடிவி தினகரன் மீது டிசம்பர் 10 ஆம் தேதி குற்றச்சாட்டை பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தினகரன் தினகரன் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளதாவது: சிலரது சதியால், இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.