வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாகக் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
சாத்தனூர் அணையில் 70 மி.மீ.: திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 60 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வேலூர், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.