குடும்ப பிரச்னை: 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தனது இரு பெண் குழந்தைகளையும் கொன்று விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தனது இரு பெண் குழந்தைகளையும் கொன்று விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிபட்டி தாலுகா, வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் ராஜிவ் (28). தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த லோகேந்திரன் என்பவரின் மகள் ராம்பிரியா (25) என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனன்யா(2) மற்றும் தர்ஷனா (1)
ஆகிய 2 பெண் குழந்தைகள். கணவர், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலை மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜிவ் வெளியில் சென்றிருந்த நிலையில் ராம்பிரியா தனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் புகார்: இதற்கிடையே ராம்பிரியாவின் பெற்றோர், தனது மகள் மற்றும் பேத்திகள் சாவில் மர்மம் உள்ளதாக கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராஜிவ் மற்றும் அவரது தந்தை முருகன் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.