ஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்டார்: அவதூறு வழக்கு முடித்து வைப்பு
பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் விமர்சித்ததாகக் கூறி திருமயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, அக்டோபர் 22-ஆம் தேதி அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.எஸ்.தினகரன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.