குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் 5 ஆவது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், புதன்கிழமை மழை சற்று தணிந்தது. மலையோரப் பகுதிகளிலும், அணைகளின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கார்மேகங்கள் சூழ்ந்திருந்த போதும் மழை பெய்யவில்லை.
தொடர் மழை காரணமாக சிற்றாறு அணைகளில் இருந்து கடந்த 4 நாள்களாக விநாடிக்கு 536 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமைகளில் மழை குறைந்ததால், அணைகளில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 268 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைகளில் இருந்து பாசனக் கால்வாய் வழியாக விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. மேலும், அணைகளின் சராசரி நீர்மட்டம் 16 அடியைக் கடந்து காணப்பட்ட நிலையில் புதன்கிழமை இந்த அளவு 15.41 ஆக குறைந்தது.
அருவியில் குளிக்கத் தடை: சிற்றாறு அணைகளிலிருந்து உபரி நீர் குறைக்கப்பட்ட போதிலும், திற்பரப்பு அருவியில் புதன்கிழமை மாலை வரை வெள்ளப் பெருக்கு குறையவில்லை. இதையடுத்து, அருவியில் 5 ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழையின் தீவிரம் குறைவு மற்றும் உபரி நீரின் அளவு குறைப்பு காரணமாக திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வணிகர்கள் பாதிப்பு: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், கடந்த 5 நாள்களாக இங்கு கடைகள் நடத்தி வரும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.