முகப்பு
தமிழ்நாடு

கருப்புப் பண விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது கருப்புப் பண தடுப்புச்

Updated On : 4 செப்டம்பர், 2018 at 2:25 AM
பகிர்:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 16 - ஆம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் பிரிட்டனில் ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பிலான இரண்டு சொத்துக்கள், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியது குறித்த விவரங்கள், அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கில் காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு வருமான வரித் துறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை, சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தது. இந்தப் புகார் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.மலர்விழி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஆஜராக தங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளதாகக் கூறி, அதற்கான உத்தரவு நகல் கார்த்தி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்ப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 16 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.