முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் வளாகத்தினுள் புகுந்த காட்டெருமை!

உதகையில் நகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை வளாகத்தினுள் புகுந்த காட்டெருமையை, அங்கிருந்து விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி

Updated On : 4 செப்டம்பர், 2018 at 2:45 AM
உதகை, கமர்ஷியல் சாலையிலுள்ள டாஸ்மாக் வளாகத்தினுள் புகுந்த காட்டெருமை.
பகிர்:


உதகையில் நகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை வளாகத்தினுள் புகுந்த காட்டெருமையை, அங்கிருந்து விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உதகை, கமர்ஷியல் சாலையிலுள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை வளாகத்தினுள் தனியாக மதுக்கூடம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தினுள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வழி தவறி வந்த ஒரு காட்டெருமை புகுந்துள்ளது. 
காட்டெருமையின் வருகை திங்கள்கிழமை அதிகாலையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியர்களுக்குத் தெரியவந்தது. உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உடனே அங்கு விரைந்து வந்து அப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்தனர். 
அருகிலிருந்த பள்ளி வளாகத்திலிருந்தும் மாணவ, மாணவியர் வெளி வராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு, அச்சாலை பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டு வரப்பட்டது.
அந்தக் காட்டெருமையை பகலில் விரட்டுவது குறித்து வனத்துறையினர் ஆலோசித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் பகல் நேரத்தில் காட்டெருமையை விரட்ட முடியாது எனவும், மாலை 5 மணிக்குப் பின்னர் காட்டெருமையை விரட்டலாமெனவும் தீர்மானிக்கப்பட்டது. 
பிற்பகலில் அந்த காட்டெருமைக்குத் தண்ணீர் கொடுக்கப்பட்டது. தண்ணீரைக் குடித்தவுடன் அது படுத்துவிட்டது. இரவு 7 மணி வரையிலும் அந்தக் காட்டெருமையை விரட்ட முடியவில்லை. இரவு 9 மணிக்கு மேல் அதை விரட்ட வனத்துறைனர் தீர்மானித்தபோது, அது மீண்டும் படுத்துவிட்டது. எனவே, அந்தக் காட்டெருமையை நள்ளிரவுக்குள் அருகிலுள்ள அரசினர் தாவரவியல் பூங்கா பகுதிக்கு கொண்டு சென்று விடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.