முகப்பு
தமிழ்நாடு

பாலாற்றில் ஆந்திர அரசு புதிய தடுப்பணை: ராமதாஸ் கண்டனம்

பாலாற்றின் துணையாற்றில் ஆந்திர அரசு புதிய தடுப்பணை கட்டி வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:28 AM
பகிர்:


பாலாற்றின் துணையாற்றில் ஆந்திர அரசு புதிய தடுப்பணை கட்டி வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக, ஆந்திர எல்லையில் புல்லூரை அடுத்த பெத்த வங்கா பகுதியில் பாலாற்றின் துணையாற்றில் தடுப்பணையை ஆந்திர அரசு கட்டி வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதுதவிர வேறு சில இடங்களிலும் தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தால் ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு பாலாற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதற்கு வாய்ப்பில்லை. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறுவதைத் தடுக்க முடியாது. 
பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்துக்கும் மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளை கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். 
இந்த விஷயத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.