முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தது மணல் திருட்டால் அல்ல கண் திருஷ்டியால்: அமைச்சரின் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் நல்லாட்சி தொடர்வதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் நல்லாட்சி தொடர்வதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை) ஆகியோர் தலைமையில் அதிமுகவினர், சிவகாசியிலிருந்து விருதுநகர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி சென்றனர். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற விழாவில், 100 பயனாளிகளுக்கு ரூ. 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 17 மாதங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் நல்லாட்சி தொடர்கிறது. தேர்தலை கண்டு அதிமுக எப்போதும் பின் வாங்கியதில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்னர், மேட்டூர், அமராவதி, பவானி சாகர் அணை உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின. மேலும், 32 ஆண்டுகளுக்கு பிறகு உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது சாதனை. இப்படி தமிழக அரசு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. சிலரின் கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது என்றார்.
Advertisement
விழாவில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியது: சிலர், அரசின் சாதனைகளை மறைக்க பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காகவே கட்சி தொடங்கியுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் சைக்கிள் பேரணி மூலம் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைக்க நினைத்தவர்களுக்கு இடிவிழுந்து விட்டது என்றார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.