மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: அரசின் கொள்கை முடிவை ஏற்றது நீதிமன்றம்
தமிழக அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில், சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில், சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதி கேட்டு அய்யாக்கண்ணு மனு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, மெரீனாவில் 90 நாள்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மெரீனாவில் அமைதியான முறையில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதியளித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அரசு மேல் முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து அன்றைய தினமே அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கின் பிரதான மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவு: அமைதியான முறையில் யாரும் போராட்டம் நடத்தலாம். ஆனால் அந்த போராட்டமே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உலகின் இரண்டாவது நீளமான மெரீனா கடற்கரையை ஒட்டிய சாலைகளில், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள், சென்னைப் பல்கலைக்கழகம், கல்லூரிகள், தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்த வழக்கில் தமிழக அரசு உரிய காரணங்களைக் கூறித்தான் மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது. இந்தப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுக்குக் கூட 2 அல்லது 3 மணி நேரத்துக்கு மேல் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
அரசின் கொள்கை முடிவு: மெரீனாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துவது, காமராஜர் சாலையில் நடைபெறும் முக்கியமான விழிப்புணர்வு நிகழ்வுகள், சுதந்திர தின, குடியரசு தின விழாக்களுக்கு விதிவிலக்கு அளித்து, பிற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
எனவே, மெரீனா கடற்கரையில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட யாருக்கும் எந்தப் போராட்டமும் நடத்த அனுமதி கிடையாது என்ற அரசின் கொள்கை முடிவு ஏற்கப்படுகிறது. மேலும், மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.