களக்காடு- முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் செப்.10 முதல் செப். 18 வரை நடைபெறுகிறது. இதையடுத்து, செப். 11ஆம் தேதிமுதல் வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தனியார் வாகனங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
களக்காடு- முண்டன்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள களக்காடு மற்றும் முண்டன்துறை கோட்டங்களில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் மழைக் காலத்திற்கு முந்தைய காலத்தில் முதல் கட்டக் கணக்கெடுப்புப் பணி நடைபெறும். நிகழாண்டு இப்பணி செப். 10 முதல் செப். 18 வரை நடைபெற உள்ளது.
முதல்கட்ட கணக்கெடுப்புப் பணியில் புலிகள், பிற ஊன் உண்ணிகள், இரையினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைக் கண்காணிக்கும் பணிகள் நடைபெறும். இப் பணியில் தன்னார்வலர்கள், மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். கணக்கெடுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு திங்கள்கிழமை (செப். 10) பயிற்சி வழங்கப்பட்டு செப். 11 முதல் செப். 18 வரை 8 நாள்கள் கணக்கெடுக்கப்படும்.
இதையடுத்து, இந்த 8 நாள்கள் வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அரசுப் பேருந்தில் மட்டும் செல்லலாம்.