கடந்த ஓராண்டாக நிலக்கரிப் பற்றாக்குறையால் இயக்கப்படாமல் இருந்த மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரயில் என்ஜினை நீலகிரி இரண்டாவது சீசனையொட்டி மீண்டும் இயக்குவதற்காக கொல்கத்தாவிலிருந்து 12 டன் நிலக்கரி குன்னூர் பணிமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் என்ஜின் கடந்த ஓராண்டு காலமாக நிலக்கரிப் பற்றாக்குறையால் மேட்டுப்பாளையம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மலை ரயில் என்ஜினை இயக்குவதற்குத் தேவையான நிலக்கரி தடையில்லாமல் தற்போது கிடைப்பதால் என்ஜின் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் பணிமனைக்கு கடந்த 7ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்த மாதம் துவங்கவுள்ள நீலகிரி இரண்டாவது சீசனையொட்டி நிலக்கரியில் இயங்கும் நீராவி என்ஜின் ரயில் இயக்கம் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலை ரயிலில் பயணிக்க உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் விரைவில் முன்பதிவு துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.