தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்தின் செவ்வாய்க்கிழமை கூறியது:
மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சி அதே இடத்தில் தொடர்கிறது. இது வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும். இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
சோழவரத்தில் 60 மி.மீ.: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 60 மி.மீ., நீலகிரி மாவட்டம், கூடலூர் பஜார், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் தலா 40 மி.மீ. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.